2016-01-30 14:54:00

அடிக்கடி சிரித்து,வாழ்வை ஒளிமயமாக்குங்கள் - கர்தினால் போ


சன.30,2016. உங்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட சிறந்த பரிசு, உங்கள் புன்சிரிப்பு; அடிக்கடி இவ்வாறு சிரித்து, வாழ்வை ஒளிமயமாக்குங்கள் என்று, மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள், செபு நகரின் முதியோர்களிடம் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்றுவரும் 51வது அகில உலக திரு நற்கருணை மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாகச் சென்றுள்ள, யாங்கூன் பேராயர், கர்தினால் போ அவர்கள், செபு நகரில், அருளாளர் அன்னை தெரேசா பிறரன்புச் சகோதரிகள் நடத்திவரும் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தோரை, இச்சனிக்கிழமையன்று சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

நாம் வாழ்வில் ஒருவர் ஒருவரோடு பகிர்ந்துகொள்ளும் பரிசுகளில், புன்சிரிப்புக்கு இணையான எளிதான பரிசு வேறெதுவும் இல்லை என்று கூறிய கர்தினால் போ அவர்கள், அந்தப் பரிசை நாம் பகிர்ந்துகொள்வதில் தாராள மனத்தைக் காட்டுவோம் என்று கேட்டுக்கொண்டார்.

சக்கர நாற்காலியில் இருந்த 60க்கும் மேற்பட்ட முதியோரைச் சந்தித்துப் பேசிய கர்தினால் போ அவர்கள், அன்னை தெரேசா பிறரன்புச் சகோதரிகள் தாராள மனதுடன் இவ்வுலகிற்கு அளித்துவரும் தலைசிறந்த பரிசு, அவர்கள் ஆற்றும் அயராத உழைப்பு என்று அருள் சகோதரிகளைப் பாராட்டினார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.