2016-01-28 15:51:00

சுத்தமான சக்திகளை உருவாக்க 66000 கோடி டாலர்கள் நிதி உதவி


சன.28,2016. சுத்தமான சக்திகளை உருவாக்கும் முயற்சிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், உலக நிறுவனங்கள் 2020ம் ஆண்டுக்குள் 66,000 கோடி டாலர்கள் நிதி உதவியை ஒதுக்கவேண்டும் என்று, ஐ.நா. பொதுச் செயலர், பான் கி மூன் அவர்கள் உலக முதலீட்டாளர்கள் முன்னிலையில் விண்ணப்பித்தார்.

நியூ யார்க் நகரில், ஐ.நா. அவையின் தலைமையகத்தில், இப்புதனன்று கூடியிருந்த 500க்கும் மேற்பட்ட உலக முதலீட்டாளர்களுக்கு உரையாற்றிய பான் கி மூன் அவர்கள், 2015ம் ஆண்டில், முன்னெப்போதும் இல்லாத அளவு, உலக வெப்ப நிலை உயர்ந்துள்ளது என்பது, நமக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

சுத்தமான சக்திகளை வளர்க்க, 2015ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 33,000 கோடி டாலர்கள் நிதி, 2004ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும், ஆறுமடங்கு அதிகம் என்றாலும், நமது பூமிக் கோளத்தைக் காப்பதற்கு இது போதாது என்று பான் கி மூன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

21ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழும் நாம், சுத்தமான சக்தியை நோக்கி நம் முயற்சிகளை அதிகரிக்காவிடில், வரலாற்றின் தோல்வியை சந்திக்கும் ஒரு தலைமுறையாக மாறிவிடுவோம் என்று ஐ.நா.பொதுச் செயலர் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.