2016-01-27 15:31:00

இருளைக் கொண்டு இருளை விரட்டமுடியாது மியான்மார் கர்தினால்


சன.27,2016. 'இருளைக் கொண்டு இருளை விரட்டமுடியாது, ஒளியை கொண்டு மட்டுமே இது இயலும்; அதேபோல், வெறுப்பால், வெறுப்பை விரட்டமுடியாது, அன்பே, வெறுப்பை வெல்லும்' என்று, கறுப்பினத் தலைவர், மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் கூறிய வார்த்தைகளை, ஆசியக் கர்தினால் ஒருவர், சிறைக் கைதிகளிடம் இச்செவ்வாயன்று கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்றுவரும் அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு, திருத்தந்தையின் சார்பில் பங்கேற்கச் சென்றுள்ள, மியான்மார் கர்தினால், சார்ல்ஸ் மாங் போ அவர்கள், செபு நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில், கைதிகளைச் சந்திக்கச் சென்றபோது, இவ்வாறு கூறினார்.

சிறையில் இருக்கும் இளையோர், எக்காரணத்தைக் கொண்டும், நம்பிக்கை இழக்கக் கூடாது என்றும், அவர்கள் மீது தான் மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும் கர்தினால் போ அவர்கள் கூறினார்.

"நம்மில் வாழும் கிறிஸ்து நமது நம்பிக்கையும், மகிமையுமாய் இருக்கிறார்" என்ற வார்த்தைகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இம்மாநாட்டின் மையக் கருத்துப் பாடலுக்கு, சிறைக் கைதிகள் நடனமாடி, கர்தினால் போ அவர்களை வரவேற்றனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

சிறைக் கைதிகள் நடனமாடிய வேளையில், மழை பெய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் போ அவர்கள், புயலிலும், மழையிலும் இறைவன் துணை வருவார் என்பதை அறிந்து, ஆடி, பாடி மகிழ்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.