2016-01-22 16:08:00

அ.சகோ.பெர்த்தில்லாவுக்கு ஓராண்டு தங்கும் அனுமதி


சன.22,2016. இந்தியாவில் கடந்த 44 ஆண்டுகளாக தொழுநோயாளர் மத்தியில் பணியாற்றிவரும் இத்தாலிய அருள்சகோதரி ஒருவருக்கு, நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஓராண்டு தங்கும் அனுமதி கிடைத்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது.

இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 77 வயதாகும் அருள்சகோதரி பெர்த்தில்லா காப்ரா(Bertilla Capra) அவர்கள், 2016ம் ஆண்டு நவம்பர் வரை நாட்டில் தங்கலாம், அதன் பின்னர் அவர் ஒவ்வோர் ஆண்டும் தங்கும் அனுமதியைப் புதுப்பிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. 

அமலமரி மறைப்பணியாளர் சபையைச் சார்ந்த இத்தாலிய அருள்சகோதரி பெர்த்தில்லா காப்ரா அவர்களுக்கு, கடந்த நவம்பரில் தங்கும் அனுமதி காலாவதியாகிவிட்ட நிலையில், அதைப் புதுப்பிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

1970ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அருள்சகோதரி பெர்த்தில்லா அவர்கள், 2010ம் ஆண்டுவரை, ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தங்கும் அனுமதியைப் புதுப்பித்து வந்தார். அதற்குப் பிறகு, அரசு விதித்துள்ள புதிய விதிமுறைகளின்படி, அச்சகோதரி தனது தங்கும் அனுமதியை ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டியிருந்தது.

மும்பையிலுள்ள விமலா தோல் நோய் சிகிச்சை மையத்தில் இயக்குனராகப் பணியாற்றிவரும் அருள்சகோதரி பெர்த்தில்லா அவர்கள், இந்த மையம் மற்றும் மக்களிடம், தான் மிகுந்த பற்று கொண்டிருப்பதாகவும், வேறொரு நாட்டில் வேறொரு பணியில் ஈடுபடுவதற்குத் தனக்கு வாய்ப்புகள் கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.