சன.18,2016. கத்தோலிக்க-யூத நட்புறவைத் தொடர்ந்து காக்கும் அடையாளமாக, இஞ்ஞாயிறன்று, உரோம் நகரிலுள்ள பெரிய யூத மதத் தொழுகைக் கூடத்திற்கு இஞ்ஞாயிறு மாலையில் சென்று உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தொழுகைக் கூடத்திற்கு, மூன்றாவது திருத்தந்தையாகச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, உரோம் யூத மத சமூகத்தின் முக்கிய தலைவர்கள் வரவேற்றுப் பேசினர். திருத்தந்தையும், இரண்டாம் உலகப் போரில் யூத இன ஒழிப்பு நடவடிக்கையில் தப்பிப் பிழைத்தவர்களை வாழ்த்தினார்.
1943ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, நாத்சிகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட யூத ஆண்கள், பெண்கள் மற்றும் சிறாரை, உரோம் நகரிலிருந்து Auschwitz வதைமுகாமுக்கு கொண்டு சென்றதை நினைவுகூர்ந்து, யூத இன அழிப்புக் கோட்பாட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் கத்தோலிக்கருக்கும், யூதருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலின் விளைவாக வெளிவந்த இறையியல் கூறுகள் அடங்கிய புதிய ஏடு ஒன்று கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டதையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1986ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால், 2010ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகிய இருவரும் இத்தொழுகைக் கூடத்திற்குச் சென்றுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |