2016-01-08 15:15:00

புலம் பெயர்ந்தவர்கள் சுமையில் லெபனான்


சன.08,2016. லெபனானில் வாழும் மொத்த மக்களில் நான்கில் ஒரு பகுதியினர் சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக, லெபனான் காரித்தாஸ் தலைவர் அருள்பணி Paul Karam அவர்கள் தெரிவித்தார்.

லெபனானில் புலம்பெயர்ந்தவர் முகாம்கள் என்று தனியாக இல்லை, ஆனால் சில சிரியா மக்கள் தாங்களாகவே குடியிருப்புக்களை அமைத்துள்ளனர், இன்னும் சிலர் அடுக்கு மாடி கட்டடங்களில் வாடகைக்கு வாழ்கின்றனர், மேலும் சிலர் கைவிடப்பட்ட கட்டடங்களில் வாழ்கின்றனர் என்று, CNS செய்தி நிறுவனத்திடம் கூறினார் அருள்பணி Paul Karam .

கடந்த நவம்பரில் ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, ஏறக்குறைய 11 இலட்சம் சிரியா நாட்டினர் லெபனானில் பதிவு செய்துள்ளனர், ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் எல்லாரும், இந்த ஐ.நா. அமைப்பில் பதிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது லெபனானில் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்த மக்கள் உள்ளனர், அதோடு, இருபதாயிரம் ஈராக் நாட்டுப் புலம்பெயர்ந்த மக்களும் வாழ்கின்றனர் என்று கூறினார் அருள்பணி Paul Karam .

சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து, லெபனானில், குறைந்தது 65 ஆயிரம் குழந்தைகள் சிரியா பெற்றோருக்குப் பிறந்தனர், இக்குழந்தைகள் எந்தச் சான்றிதழும் இல்லாமல், சொந்த நாடின்றி உள்ளனர். 

ஆதாரம் : CNS/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.