2015-12-28 16:50:00

ஒரு மதம் மற்றொரு மதத்தைக் கட்டுப்படுத்த முடியாது


டிச.28,2015. சமூகத்தில் எந்தவொரு மதமும் வேறொரு மதத்தைக் கட்டுப்படுத்தவோ, கோட்பாடுகளை மூழ்கடிக்கவோ அல்லது கட்டாயமாக புகுத்தவோ இடமளிக்க முடியாது என இலங்கை அரசுத்தலைவர் மைத்ரிபால ஸ்ரீசேனா அவர்கள் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் அமைக்கப்பட்ட 16வது பெனடிக் கல்வி நிலையத்தை திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் அரசுத்தலைவர் மைத்ரிபால ஸ்ரீசேனா.

மதங்கள் மனிதரை நல்வழிப்படுத்துவதற்காகவே இருப்பதாகவும், மதங்களின் அடையாளங்கள் மக்கள் மத்தியில் காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல, அனைத்துலக அளவிலும், இனங்கள், மதங்கள், மொழிகள் போன்று அனைவருக்கும் மதத்துக்குரிய அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார் இலங்கை அரசுத்தலைவர்.

புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இந்துக்களின் மத மற்றும் கலாச்சார அடையாளங்களும் மொழிக்குரிய அடையாளங்களும் அவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான காரணியாக அமைவதாக எனவும் இலங்கை அரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று உலகம் முழுவதையும் ஒரே கிராமமாக மாற்றியுள்ள இந்தச் சூழலில், மனித சமூகத்தின் இருப்பை உரிய முறையில் பேணுவதற்கும் தனிமனித வாழ்க்கைக்கும் அறிவும் அனுபவமும் உதவி புரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆதாரம் : தமிழ்வின்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.