2015-12-26 13:43:00

கடுகு சிறுத்தாலும் – கடவுளே பொறுமை, பொறுமையே கடவுள்!


இறையன்பும், பிறரன்பும் நிறைந்த அந்தோனி அவர்களின் இல்லம் தேடி, முதியவர் ஒருவர் தர்மம் கேட்டு வந்தார். அந்தோனி அவர் மீது இரக்கம் கொண்டு, அவரைத் தன்னுடன் உணவருந்த அழைத்தார். முதியவருக்கு, இந்த அழைப்பு, ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது.

உணவருந்துவதற்கு முன், வீட்டுத்தலைவர் அந்தோனி, கண்களை மூடி, இறைவனுக்கு நன்றி சொல்ல ஆரம்பித்தார். அந்தோனி, கடவுளின் பெயரைச் சொன்னதும், முதியவர், கோபம் கொண்டு, இறைவனை வசைபாட ஆரம்பித்தார். இதைக் கண்ட அந்தோனி, கோபத்துடன், அந்த முதியவரை அங்கிருந்து விரட்டிவிட்டார்.

அன்றிரவு, இறைவன் அந்தோனியின் கனவில் தோன்றி, "அந்த முதியவர் கடந்த 30 ஆண்டுகளாக, என்னை, தினமும் திட்டிக்கொண்டிருக்கிறார். நான் அவருக்கு ஒவ்வொரு நாளும் உணவு கிடைக்கும்படி வழி செய்துவருகிறேன். அவர் திட்டியதை உம்மால் ஒருநாள் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே!" என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு மறைந்தார்.

கடவுளே பொறுமை, பொறுமையே கடவுள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.