2015-12-18 15:08:00

பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் செயல்திட்டம் அவசியம்


டிச.18,2015. பாகிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக, தேசிய அளவில் செயல்திட்டம் ஒன்றை அமல்படுத்துமாறு அந்நாட்டின் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் அமைதி மற்றும் மனித முன்னேற்ற நிறுவனம், பெண்கள் விழிப்புணர்வு கழகம் மற்றும் பிற அரசு-சாரா நிறுவனங்களோடு இணைந்து Faisalabadல் அண்மையில் நடத்திய செப வழிபாட்டில் கலந்துகொண்ட கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்களும், ஆர்வலர்களும் இவ்வாறு பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதற்குத் தீர்மானித்த இத்தலைவர்கள், மதம் சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்பில் சீர்திருத்தம் அவசியம் என்று வலியுறுத்தினர்.

சமய சகிப்புத்தன்மை மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிக்க, செயல்திட்ட யுக்தியை வளர்க்குமாறும் வகுப்புவாதத்தை முறியடிக்க புதிய சட்டம் தேவை என்றும் கூறிய அத்தலைவர்கள், இவற்றை கல்வி வழியாகவே செயல்படுத்த முடியும் என்றும் கூறினர்.

பாகிஸ்தானில் ஆரம்பப் பள்ளி செல்லும் வயதுடைய 73 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.