2015-12-18 10:21:00

அருளாளர் அன்னைதெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஏற்பு


டிச.18,2015. இந்தியாவின் கொல்கத்தாவில் பிறரன்பு மறைப்பணியாளர்கள் துறவு சபைகளைத் தொடங்கிய அருளாளர் அன்னை தெரேசா அவர்களின் பரிந்துரையால் நிகழ்ந்த புதுமை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட புனிதர் நிலை பேராயத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ அவர்கள் இவ்வியாழன் மாலையில் திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து அருளாளர் அன்னை தெரேசா பரிந்துரையால் நடந்த புதுமை மற்றும் மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களைச் சமர்ப்பித்தார்.

1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி அல்பேனியா நாட்டின் செகாப்ஜியில் பிறந்த Agnes Gonxha Bojaxhiu, தனது 18வது வயதில் 1928ம் ஆண்டில் லொரேத்தோ அருள்சகோதரிகள் சபையில் சேர்ந்தார். 1929ம் ஆண்டில் இந்தியா வந்து, 1931ம் ஆண்டில் லொரேத்தோ சபையில் துறவு பயிற்சியை முடித்து தெரேசா என்ற புதிய பெயரை ஏற்றார்.  லொரேத்தோ சபை பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய அருள்சகோதரி தெரேசா, 1947ம் ஆண்டில் அச்சபையை விட்டு விலகி, 1950ம் ஆண்டில் கொல்கத்தாவில் பிறரன்பு மறைப்பணியாளர் சபையை ஆரம்பித்தார். 1979ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அன்னை தெரேசா, தனது 87வது வயதில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி கொல்கத்தாவில் இறைபதம் அடைந்தார். 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார் அன்னை தெரேசா. இவரின் பரிந்துரையால் நடந்த புதுமை ஒன்றை டிசம்பர் 17, இவ்வியாழனன்று ஏற்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அருளாளர் அன்னை தெரேசாவை புனிதர் என்று அறிவிக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

மேலும், இயேசுவின் திருஇதய கொம்போனி மறைப்பணியாளர்கள் சபையின் அருள்பணியாளர் Giuseppe Ambrosoli(1923,ஜூலை,25-1987,மார்ச்,27), கிறிஸ்தவப் பள்ளிகள் சகோதரர்கள் சபையின் அருள்சகோதரர் Leonardo Lanzuela Martínez(1894,நவ.8-1976,மார்ச்,14), பொதுநிலையாளர் Enrico Hahn(1800,ஆக.29-1882,மார்ச்11) ஆகிய மூன்று இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு பற்றிய விபரங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.