2015-12-17 15:18:00

திருத்தந்தைக்கு இத்தாலிய அரசுத்தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து


டிச.17,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது இத்தாலிய மக்கள் கொண்டுள்ள மதிப்பு, மிகவும் உண்மையானது மற்றும் ஆழமானது என்றும், அம்மக்கள் சார்பாக தான் திருத்தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை வழகுவதாகவும் இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்கள் கூறியுள்ளார்.

டிசம்பர் 17, இவ்வியாழனன்று தன் 79வது பிறந்தநாளைக் கொண்டாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இத்தாலிய அரசுத் தலைவர் Mattarella அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், இறைவன், திருத்தந்தைக்கு நல்ல உடல்நலத்தை வழங்கவேண்டுமென வாழ்த்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திலும் அவர் கூறும் கருத்துக்களை இத்தாலிய மக்களும் கவனத்துடன் செவிமடுக்கின்றனர் என்றும், நலிவுற்ற சமுதாயத்தின் சார்பில், திருத்தந்தை விடுக்கும் விண்ணப்பங்கள், ஒவ்வொருவரது இதயத்தையும் தொடுகின்றன என்றும், அரசுத் தலைவர், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், UNITALSI எனப்படும் பிறரன்பு அமைப்பினரின் உதவியுடன் குழந்தை இயேசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று, குணமடைந்துள்ள குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் இணைந்து, திருத்தந்தைக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை, ஒரு காணொளி செய்திவடிவில் அனுப்பியுள்ளனர்.

இதேவண்ணம், இத்தாலியில் இயங்கிவரும் பல்வேறு தொழில் அமைப்புக்களும் பிறரன்பு நிறுவனங்களும் திருத்தந்தை அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.