2015-12-17 15:44:00

இலங்கையின் அன்னை மரியா பசிலிக்கா புனிதக் கதவு திறப்பு


டிச.17,2015. இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டையொட்டி, கத்தோலிக்கப் பள்ளிகளில் மறைகல்வி, மற்றும் நன்னெறி கல்வியில் மறுமலர்ச்சியைக் கொணரவும், நல்ல மனசாட்சியை வளர்க்கும் வழிகளை இளையோருக்குக் கற்றுத்தரவும் இலங்கைத் தலத்திருஅவை திட்டங்கள் வகுத்துள்ளன என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் புனித லூசியா பேராலயத்தில் டிசம்பர் 8ம் தேதியன்று கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், புனிதக் கதவைத் திறந்தார் என்றும், கொழும்புவின் வட பகுதியில் Tewatteயில் அமைந்துள்ள முக்கியத் திருத்தலமான இலங்கையின் அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவு, டிசம்பர் 12ம் தேதி திறக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை மரியா பசிலிக்காவின் புனிதக் கதவு, 2016ம் ஆண்டு முழுவதும், காலை 6 மணிமுதல் மாலை 8 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும், இன்னும் அயல்நாடுகளில் உள்ள புனிதத் தலங்களுக்கும் திருப்பயணம் மேற்கொள்வதற்கு விசுவாசிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் வழங்கப்படும் என்பதையும் தலத்திருஅவை தன் திட்டங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.