2015-12-16 17:00:00

வன்முறையை, உள்ளத் துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும்


டிச.16,2015. கிறிஸ்து பிறப்பின் வழியே இவ்வுலகிற்கு அறிவிக்கப்பட்ட அமைதி, முன்னெப்போதும் இல்லாத அளவு, உறுதியாக, அழுத்தமாக இவ்வுலகிற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஜோசப் கர்ட்ஸ் (Joseph Kurtz) அவர்கள் கூறினார்.

அமெரிக்காவின் சான் பெர்னடினோ, மற்றும் கொலராடோ ஸ்ப்ரிங்க்ஸ் என்ற இரு இடங்களில் நடைபெற்ற வன்முறைகளின் பின்னணியில், பேராயர் கர்ட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், வன்முறையையும், வெறுப்பையும் உள்ளத் துணிவுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

அர்த்தமற்ற, மதியற்ற வன்முறைகள் இறைவன் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை, தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பேராயர் கர்ட்ஸ் அவர்கள், எக்காரணம் கொண்டும், இந்த வன்முறைகளை இறைவன் பெயரால் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

ஒரு சிலரது மதியற்றச் செயல்களால், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவரையும் கண்டனம் செய்வதும், அவர்களது வருகையைத் தடுப்பதும், கிறிஸ்தவர்களுக்கு அழகல்ல என்பதை, அமெரிக்க ஆயர்கள் சார்பில் தான் வலியுறுத்த விழைவதாக, பேராயர் கர்ட்ஸ் அவர்கள் இவ்வறிக்கையில் கூறியுள்ளார். 

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.