டிச.16,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அடுத்த பொதுச் செயலர் தேர்தலை வெளிப்படையானதாகவும், இயன்றவரை எல்லாரையும் இணைக்கும் முயற்சியின் ஒரு கட்டமாகவும் நடத்தும் நோக்கத்தில், அத்தேர்தலில் முதன்முறையாக, ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளும் முழுமையாய் இணைக்கப்படும் என்று ஐ.நா. பொது அவைத் தலைவர் Mogens Lykketoft அவர்கள் அறிவித்துள்ளார்.
அடுத்த பொதுச் செயலர் தேர்தல் குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவைத் தலைவரும் தானும் இணைந்து அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் குறித்து இச்செவ்வாயன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த Lykketoft அவர்கள் இதனை அறிவித்தார்.
ஐ.நா. பொதுச் செயலர் தேர்தல் நடைமுறையில் இருக்கவேண்டிய ஒளிவுமறைவற்ற தன்மையை விளக்கியுள்ள அக்கடிதம், ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு, ஆண் வேட்பாளர்கள் தவிர, பெண் வேட்பாளர்களையும் பரிந்துரைக்குமாறு அனைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
2016ம் ஆண்டு ஜூலை இறுதியில் ஐ.நா. பாதுகாப்பு அவை வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு முன்னர், உறுப்பு நாடுகள் வேட்பாளர்களைப் பரிந்துரைக்குமாறும் அக்கடிதம் கேட்டுள்ளது என்று கூறினார் Lykketoft.
ஐ.நா. அரசியல் அமைப்பின்படி, ஐ.நா. பொதுச் செயலர், ஐ.நா. பாதுகாப்பு அவையின் பரிந்துரையின்படி ஐ.நா. பொது அவைத் தேர்ந்தெடுக்கும். அடுத்த புதிய பொதுச் செயலர் 2017ம் ஆண்டு சனவரியில் பதவியேற்பார்.
ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |