2015-12-16 16:54:00

அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு அனைத்தும் தயார்


டிச.16,2015. வருகிற சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி முடிய பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு (Cebu) நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று செபு பேராயர் ஹோசே பால்மா (Jose Palma) அவர்கள் செய்தியாளர்களிடம் இத்திங்களன்று அறிவித்தார்.

"உங்களில் கிறிஸ்து, நமது மகத்துவத்தின் நம்பிக்கை" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டின் தாக்கம், கத்தோலிக்கத் திருஅவையையும் தாண்டி மற்றவர்களைச் சென்றடையும் என்று தான் நம்புவதாக, பிலிப்பின்ஸ் பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 10,000த்திற்கும் அதிகமானோர் வருவர் என்று எதிர்பார்ப்பதாகவும், ஏற்கனவே, 8,500க்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்றும், செபு துணை ஆயர், Dennis Villarojo அவர்கள் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், திருத்தந்தையின் சார்பில், மியான்மார் கர்தினால் Charles Maung Bo அவர்கள் கலந்துகொள்வார் என்றும், இவரைத் தவிர, மும்பைக் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியஸ், நியூ யார்க் கர்தினால் டிமொத்தி டோலன்  ஆகியோரும் கலந்துகொள்வர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.