2015-12-14 16:35:00

பிப்ரவரி12-18, 2016ல் மெக்சிகோவுக்குத் திருத்தூதுப் பயணம்


டிச.14,2015. 2016ம் ஆண்டு பிப்ரவரியில் மெக்சிகோ நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 12, இச்சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் மெக்சிகோ நாட்டு குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழா திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறையுரையில் மெக்சிகோ திருத்தூதுப் பயணம் பற்றி அறிவித்தார்.

2016ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மெக்சிகோ நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை, 12ம் தேதி மதியம் 12.30 மணிக்கு உரோமையிலிருந்து புறப்பட்டு அன்று இரவு 7.30 மணிக்கு மெக்சிகோ நகர் சென்றடைவார்.

பிப்ரவரி 13ம் தேதி மெக்சிகோ அரசுத்தலைவரைச் சந்தித்து அரசு வரவேற்பைப் பெற்று, அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தும் திருத்தந்தை, மாலை 5 மணிக்கு குவாதாலூப்பே அன்னை மரியா பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.

15ம் தேதி San Cristobal de Las Casaல், குடும்பங்களைச் சந்தித்தல் உட்பட, பேராலயம் செல்தல்,16ம் தேதி Moreliaவில் இளையோரைச் சந்தித்தல், 17ம் தேதி Ciudad Juarezவில் தொழிலாளரைச் சந்தித்தல் உட்பட பல பயண நிகழ்வுகளை நிறைவேற்றி 18ம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1531ம் ஆண்டில், மெக்சிகோ பழங்குடியினத்தவர் புனித ஹூவான் தியேகோ என்பவருக்கு குவாதாலூப்பே அன்னை மரியா காட்சிகள் கொடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.