2015-12-14 16:44:00

திருத்தந்தை-மாபெரும் மன்னிப்பின் காலம் தொடங்கியுள்ளது


டிச.14,2015. இஞ்ஞாயிறு காலையில் உரோம் தூய ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், புனிதக் கதவைத் திறந்து வைக்கும் திருப்பலி நிறைவேற்றி மறையுறையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பசிலிக்காவிலும், உலகின் அனைத்துப் பேராலயங்களிலும் புனிதக் கதவைத் திறந்திருப்பது, மகிழ்வாக வாழ ஓர் அழைப்பு என்று கூறினார்.

மாபெரும் மன்னிப்பின் காலம் தொடங்கியுள்ளது, நாம் அடையும் மகிழ்வு, பெரும் அடக்குமுறை மற்றும் வன்முறையை, குறிப்பாக, அதிகாரத்தில் இருப்பவரின் அடக்குமுறை மற்றும் வன்முறையை எதிர்ப்பதற்கு உதவுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்மஸ் நெருங்கி விட்டது என்பதால், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு மகிழ்வு ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது என்றும் உரைத்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் அண்மித்து வருவதும், புனிதக் கதவு திறக்கப்பட்டிருப்பதும் மகிழ்வுக்கான காரணம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் மனித சமுதாயத்தைக் காயப்படுத்தும் வன்முறைகளின் பன்முகங்களை நாம் எதிர்கொள்ளும்போது சோர்வடையவோ வருத்தப்படவோ நம்மை அனுமதிக்கக் கூடாது. இரக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீதியின் பணிகளை நாம் ஆற்ற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஜான் இலாத்தரன் பசிலிக்கா முகப்பில் தொடங்கிய திருவழிபாட்டில் முதலில் புனிதக் கதவைத் திறந்து சிறிது நேரம் செபித்தார் திருத்தந்தை. பின்னர் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றினார்.

மேலும், இஞ்ஞாயிறன்று, உரோம் தூய பவுல் பசிலிக்காவின் புனிதக் கதவை, அப்பசிலிக்காவின் தலைமைக்குரு கர்தினால் James Harvey அவர்கள் திறந்து வைத்தார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.