2015-12-14 16:37:00

டெல்லி திருஇதயப் பேராலயப் புனிதக் கதவு திறப்பு


டிச.14,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் டெல்லி திருக்குடும்ப மருத்துவமனையில் ஏழைகளுக்கென சிறப்பு சேமிப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் இளையோர் மத்தியில் வேலைவாய்ப்பின்மையைக் களைவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்று டெல்லி உயர்மறைமாவட்ட பேராயர் Anil Joseph Thomas Couto அவர்கள் கூறினார்.

டெல்லி திருஇதயப் பேராலயப் புனிதக் கதவை இஞ்ஞாயிறன்று திறந்து வைத்துள்ள பேராயர் Couto அவர்கள், இரக்கத்தின் சமூகப் பணிகள், இரக்கத்தின் ஆன்மீகப் பணிகள் ஆகிய இரு கூறுகளை இப்புனித ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறினார்.

இறைவனின் மன்னிப்பையும், அவரின் எல்லையற்ற அன்பையும் விசுவாசிகள் அனுபவிப்பதற்கு பல்வேறு சலுகைகளை இரக்கத்தின் ஆண்டு வழங்குகின்றது என்று திருத்தந்தை கூறியதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Couto அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் திருத்தந்தையின் சொற்களின்படி நடப்போம் என்றும் கூறினார்.

டெல்லியில் வருகிற மார்ச் 4,5 தேதிகளில் 24 மணி நேர செபம், ஆராதனை நடைபெறும், டெல்லியில் ஐந்து ஆலயங்களை, திருப்பயண ஆலயங்களாக அறிவித்திருப்பதையும் குறிப்பிட்டார் பேராயர் Couto. 

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.