2015-12-12 15:54:00

மலைப்பகுதிகளில் பசியாய் இருப்பவரின் எண்ணிக்கை அதிகம்


டிச.12,2015. உலக அளவில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், மலைப்பகுதிகளில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் மக்களின் எண்ணிக்கை  கடந்த 12 ஆண்டுகளில் ஏறக்குறைய 33 கோடியாக அதிகரித்துள்ளது என்று, FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியது.

உலக மலைகள் நாளான டிசம்பர் 11, இவ்வெள்ளியன்று அறிக்கை வெளியிட்ட FAO நிறுவனம், வளரும் நாடுகளில் மலைப்பகுதிகளில் நகர மற்றும் கிராமப் புறங்களில் வாழும் மக்களில் மூன்று பேருக்கு ஒருவர் வீதம் பசியால் வாடுகின்றனர், இந்நிலை, உலக அளவில் ஒன்பது பேருக்கு ஒருவர் என்று தெரிவித்துள்ளது.

வளரும் நாடுகளின் மலைப்பகுதிகளில் பசியாய் இருப்பவரின் எண்ணிக்கை 2000மாம் ஆண்டில் 25 கோடியே 30 இலட்சமாக இருந்தது, இது 2012ம் ஆண்டில் 32 கோடியே 90 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும் FAO கூறியது. 

இப்பூமியின் நிலப்பகுதியில் 22 விழுக்காடு மலைகள் என்றும், இப்பகுதியில் உலகின் 13 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர் என்றும் FAO கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2003ம் ஆண்டில், உலக மலைகள் நாள் டிசம்பர் 11ம் தேதி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.