2015-12-07 15:21:00

கடுகு சிறுத்தாலும் – ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமே


சென்னையில் கமலாவும், விமலாவும் தினமும் ஒரே மின்சார இரயிலில் ஏறி ஒரே அலுவலகம் செல்லும் நண்பர்கள். உடை மற்றும் உடல் அழகில் கவனம் செலுத்துபவர் கமலா. இரயிலில் ஏறிய நிமிடம் முதல், தொலைக்காட்சியில் அல்லது புத்தகத்தில் படித்த அழகு குறிப்பைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டு வருவார் கமலா. விமலாவுக்குச் சலிப்பு தட்டினாலும் பேசாமல் வருவார். அவர்கள் இரயிலைவிட்டு இறங்கியதும், கமலா, அன்றும் வழக்கம் போல, நடைமேடையில் எடை பார்க்கும் இயந்திரம் வைத்திருக்கும் மனிதரிடம் சென்று, இரண்டு ரூபாய் நாணயத்தைக் கொடுத்துவிட்டு எடை பார்த்தார். “ஐயோ, என்னடி ரெண்டு நாள்ல ஒரு கிலோ கூடிடுச்சு” என்றவாறு நடந்தார். விமலாவுக்கு ஒரே எரிச்சல். அன்று மதியமும் தான் கொண்டுவந்த உணவைச் சாப்பிடாமல், அலுவலக உதவியாளரை அழைத்து பழச்சாறு வாங்கிப் பருகினார் கமலா. மாலை வீடு திரும்பும்போது அதே இடத்தில் கமலா எடை பார்க்க நின்றார். “மதியம் பட்டினி.. ஆனாலும் எடை பார்ப்பது ரொம்ப அவசியமோ?” என்று மனதில் பொருமிக்கொண்டு இரயில் ஏறி உட்கார்ந்ததும் விமலா பொரிந்தார், “அப்படி என்னடி அழகு வேண்டிக்கிடக்கு? ஒரு நாளைக்கு நாலு தடவை எடை பாக்கணுமா? அழகா இருந்து என்ன சாதிக்கப்போற?” என்றார். அதற்கு கமலா, “விமலா, நீ ஒரு பக்கம்தான் பாக்குற. நான் தினமும் எடை பாக்குற அந்த நபரைக் கவனிச்சிருக்கியா? அவர் பார்வையில்லாதவர். ஊனம் இல்லாதவங்களே பிச்சை எடுக்கறப்போ, அவர் கவுரவமா எடை பாக்குற இயந்திரம் வச்சு பிழைப்பு நடத்துறார். ஏதோ என்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டுமேன்னுதான் தினமும் எடை பார்க்கிறேன்”என்றார் கமலா புன்முறுவலுடன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.