2015-12-05 15:32:00

லெபனானில் அரசுத்தலைவர் இடம் விரைவில் நிரப்பப்படும்


டிச.05,2015. லெபனான் நாட்டில் 2014ம் ஆண்டு மே மாதத்திலிருந்து காலியாக உள்ள அரசுத்தலைவர் இடம் விரைவில் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள்.

லெபனானின் Marada இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் Suleiman Franjieh அவர்கள் புதிய அரசுத்தலைவர் வேட்பாளராக அண்மையில் மனுத்தாக்கல் செய்துள்ளதையடுத்து அந்நாட்டு ஆயர்கள் தங்களின் நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

லெபனானின் அரசியல் நிலைமை குறித்து தங்களின் அண்மைக் கூட்டத்தில் கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், அரசுத்தலைவர் பதவியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளதோடு, உரையாடல்கள் வழியாக பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுமாறு கேட்டுள்ளனர்.

லெபனான் அரசியல் அமைப்பின்படி, அரசுத்தலைவர் பதவி அந்நாட்டின் சிறுபான்மை கிறிஸ்தவர்க்குரியதாகும். 2014ம் ஆண்டு மே மாதத்தில் அரசுத்தலைவர் Michel Suleiman அவர்களின் பதவிக்காலம் முடிந்து புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய அரசியல்வாதிகளிடையே முரண்பாடுகள் எழுந்ததையடுத்து அவ்விடம் காலியாகவே உள்ளது.  

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.