2015-12-03 10:52:00

கடுகு சிறுத்தாலும் – பெரியவரை வியக்க வைக்கும் சிறார்


மரங்களால் நிறைந்த கிராமம் அது. அந்தக் கிராமத்து மரங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதாய் ஒரு வட்டக் குறி. அந்த வட்டத்திற்குள் குறி தவறாது துப்பாக்கியால் சுட்ட அடையாளம். விழாக் காலத்தில் அந்த ஊரைக் கடந்து செல்ல நேர்ந்த அரசர் ஒருவர், அந்த மரங்களில் காணப்பட்ட வட்டக்குறியைப் பார்த்து வியந்தார். இத்துணை சிறிய வட்டங்களுக்குள் குறி தவறாது சுடத்தெரிந்த அந்த வித்தகனைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். உடனடியாக காவலாளர்கள் அந்த ஊருக்குள் சென்று அந்த வித்தகன் பற்றி விசாரித்து வந்தனர். அந்த வித்தகன் ஒரு பத்து வயதுச் சிறுவன் என்று அறிந்தபோது, அரசருக்கு அச்சிறுவனை நேரில் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அச்சிறுவனும் அழைத்துவரப்பட்டான். இத்துணை துல்லியமாக, குறி தவறாது சுடும் திறமை உனக்கு எப்படியப்பா வந்தது என்று வியப்புடன் கேட்டார் அரசர். அதற்கு அச்சிறுவன், அது ஒன்றும் பெரிய காரியமே இல்லை அரசே. முதலில் துப்பாக்கியால் சுட வேண்டும். பின்னர் அதைச் சுற்றி சிறியதொரு வட்டமிட வேண்டும். அவ்வளவுதான் என்றான் மிக சாதாரணமாக. ஆம். பெரியவர்க்குக் கடினமாகத் தெரிபவை சிறியவர்க்குச் சாதாரணமாகத் தெரிகின்றன. சிறியவரின் அறிவு பல நேரங்களில் பெரியவர்களை வியக்க வைக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.