2015-12-01 14:56:00

திருத்தந்தை-ஆப்ரிக்காவை இறைவன் ஆசிர்வதிப்பாராக!


டிச.01,2015. இறைவன் ஆப்ரிக்காவை ஆசிர்வதிப்பாராக! என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இச்செவ்வாயன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும், கென்யா, உகாண்டா மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு நாடுகளுக்கு ஆறு நாள்கள் கொண்ட திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இத்திங்கள் மாலை 6.30 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்திறங்கிய திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னை மரியாவுக்கு நன்றியாக மலர்களை அர்ப்பணித்து சிறிது நேரம் செபித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னும், அதனை நிறைவு செய்த பின்னும் மேரி மேஜர் பசிலிக்கா சென்று அங்கு வணங்கப்படும் Salus Populi Romani அன்னை மரியா படத்திற்கு முன்பாகச் செபிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாளான 2013ம் ஆண்டு மார்ச் 14ம் தேதியிலிருந்து இதுவரை 28 முறைகள் உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்றுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.