2015-11-21 14:42:00

கடுகு சிறுத்தாலும் – அடிமைகளுக்கே அரசர்கள் தேவை


அடிமைகளாக வாழ விரும்புகிறவர்களுக்கு, அதாவது, தங்களைத் தாங்களே ஆளத் தெரியாது என்று தீர்மானித்தவர்களுக்குத்தான் அரசன் தேவை. இரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய 'உயிர்ப்பு' (Resurrection) என்ற நாவலில் ஒரு பகுதி உண்டு. சிறுவன் ஒருவன் ஒரு கடையை உடைத்து ஒரு பாயைத் திருடிவிடுவான். அச்சிறுவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்புவிப்பார்கள். 10 ரூபிள்ஸ் மதிப்புள்ள பாய்க்காக 1000 ரூபிள்ஸ் செலவழித்து வழக்காடுவார், அந்தக் கடைக்காரர். அப்போதும் நீதி கிடைக்காது. ஒரு கட்டத்தில், தனக்கு பாயே வேண்டாம் எனவும், தான் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லி ஓடிவிடுவார்.

நாவலின் இப்பகுதியில் டால்ஸ்டாய் அழகாகச் சொல்வார்: “எல்லாருக்கும் எல்லாம் என்று இருந்ததை, ஒருவன் மட்டும் எடுத்துக்கொண்டு, எடுத்துக்கொண்ட அவன், மற்றவர் சொத்தில் வாழ்ந்துகொண்டு, மற்றவர்களுக்குச் சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தைக் கொண்டு மற்றவர்களைத் தண்டிப்பான். எல்லாருக்கும் எல்லாம் என இருந்தால், அரசர்களுக்கு வேலையில்லை. அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, அரசர்கள், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கவிடுவதில்லை.”

இத்தகைய அரசர்கள், தலைவர்கள் நமக்குத் தேவையா? 'தீமை இல்லாத அதிகாரம் என்று ஒன்று இல்லவே இல்லை' என்று சொல்வார், புனித தாமஸ் அக்வினாஸ். எல்லா அதிகாரத்திலும் தீமை உண்டு. சுயநலம் இல்லாத அரசர்களையோ, தலைவர்களையோ காண்பது, மிக அரிது.

தமிழகத்தின் வெள்ளப்பெருக்கிலும், மக்களின் துயரிலும், பசியிலும், வறுமையிலும் தங்களின் இன்பத்தையும், பாதுகாப்பையும் முதன்மைப்படுத்தும் அம்மாக்களும், அய்யாக்களும்தான் இன்று அரசர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? அவர்களுக்குக் கீழ் இருப்பவர்கள்தாம் விழுந்து, விழுந்து – சில வேளைகளில், காலில் விழுந்து - வேலை செய்கிறார்கள்.

நாம் அடிமைகளாக இருக்கும்வரை அரசர்கள் இருக்கவே செய்வார்கள். அம்மாக்களும், அய்யாக்களும், தலைவர்களும், அரசர்களும் 'அவசியமான தீமை' (necessary evil) - இல்லையா?

(அருள்பணி யேசு கருணா அவர்களின் சிந்தனைகளிலிருந்து...)

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.