2015-11-18 15:14:00

திருத்தந்தையின் டிசம்பர் மாத நிகழ்ச்சிகள்


நவ.18,2015. வருகிற டிசம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் திருப்பலி மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் பட்டியல் இப்புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 8, செவ்வாயன்று கொண்டாடப்படும் தூய கன்னி மரியாவின் அமல உற்பவப் பெருவிழாவன்று காலை 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஆடம்பரத் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் முகப்பில் அமைந்துள்ள புனிதக் கதவைத் திறந்து, இரக்கத்தின் யூபிலி ஆண்டைத் துவக்கி வைப்பார்.

அன்று மாலை, உரோம் நகர், ஸ்பானிய வளாகத்தில் அமைந்துள்ள அமல உற்பவ அன்னை மரியா திரு உருவத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

டிசம்பர் 12, சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் குவாதலூப்பே அன்னை மரியா திருநாளையொட்டி, மாலை 6 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியாற்றுவார்.

அதற்கு அடுத்தநாள், திருவருகைக் காலத்தின் 3ம் ஞாயிறன்று, காலை 9.30 மணிக்கு, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் திருப்பலியாற்றி, அப்பேராலயத்தின் முகப்பில் உள்ள புனிதக் கதவை திறந்துவைப்பார், திருத்தந்தை.

டிசம்பர் 24, இரவு 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலியை நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 25, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவன்று, மதியம் 12 மணிக்கு, புனித பேதுரு வளாகத்தின் மேல் மாடத்திலிருந்து, 'Urbi et Orbi', அதாவது, 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற கிறிஸ்மஸ் சிறப்புச் செய்தியை வழங்குவார்.

டிசம்பர் 27 கொண்டாடப்படும் திருக்குடும்பத் திருநாளன்று, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் குடும்பங்களுக்குச் சிறப்புத் திருப்பலியாற்றும் திருத்தந்தை, ஆண்டின் இறுதி நாளான, டிசம்பர் 31ம் தேதி மாலை, 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில் 'Te Deum' எனப்படும், நன்றி வழிபாட்டை முன்னின்று நடத்துவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.