நவ.10,2015. "குழந்தைகளும், நீடித்து, நிலைத்து நிற்கும் முன்னேற்றமும்: கல்விக்கு ஒரு சவால்" என்ற தலைப்பில், பாப்பிறை அறிவியல் கழகம், நவம்பர் 13, இவ்வெள்ளி முதல் 15 ஞாயிறு முடிய, வத்திக்கானில் பயிற்சிப் பாசறை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு முன்னேற்றப் பாதையை இளைய தலைமுறையினருக்கு கல்வி வழியே கொணர்வது எப்படி என்பதை ஆய்வு செய்வதே இப்பயிற்சிப் பாசறையின் நோக்கம் என்று, பாப்பிறை அறிவியல் கழகம் அறிவித்துள்ளது.
கலாச்சாரங்கள், மதங்கள், மனித சமுதாய நிலைகள் என்று அனைத்து நிலைகளிலும் பல்வேறு வகையினர் வாழ்கின்றனர் என்பதை இளைய தலைமுறையினர் உணர்ந்து, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெறவேண்டும் என்பது இப்பயிற்சிப் பாசறையின் குறிக்கோள் என்று இதனை ஏற்பாடு செய்வோர் கூறியுள்ளனர்.
"நீடித்து, நிலைத்து நிற்கும் மனிதமும், இயற்கையும்" என்ற தலைப்பில், 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தொடர்ச்சியாக வரவிருக்கும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |