2015-11-07 16:38:00

மத்தியக்கிழக்கு கிறிஸ்தவ தலைவர்களின் அமைதி விண்ணப்பம்


நவ.07,2015. பல மதங்களின் ஒன்றிணைந்த வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளின்  தலைவர்களும் உலகின் அரசியல் மற்றும் மதத் தலைவர்களும் சேவையாற்றவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது, மத்தியகிழக்கு கிறிஸ்தவ சபைகளின் அவை.

பல மதங்கள் ஒன்றிணைந்து வாழமுடியும் என்பது கிழக்கத்திய நாடுகளில் நாம் காணும் மிகப் பெரும் சொத்து எனக் கூறும் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், தீவிரவாதம், அழிவு மற்றும் இருளின் தீய சக்திகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர்.

மத்தியக்ககிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள புலம்பெயர்ந்தோர் பிரச்சனை, சிரியாவிலும் ஈராக்கிலும் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்கள், மத்தியக் கிழக்கில் கிறிஸ்தவர்கள் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் வெற்றிடங்கள் போன்றவை குறித்தும் தங்கள் ஆழ்ந்த கவலையை, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர், கிறிஸ்தவத் தலைவர்கள்.

மதத்தின் அடிப்படையில் மக்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்படும் இந்நிலைகளை அகற்ற, மத்தியக் கிழக்கு நாடுகளின் தலைவர்களும் உலக மதங்கள் மற்றும் அரசுகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து நல்ல முடிவுகளை எடுக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ள  கிறிஸ்தவத் தலைவர்கள், புலம்பெயர்ந்தோரை வரவேற்று, அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிவரும் நாடுகளின் தலைவர்களுக்கு தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்துவரும் திருத்தந்தைக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர், மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.