2015-11-06 15:41:00

கடுகு சிறுத்தாலும்.. : உயிர் பலியை இறைவன் விரும்புவதில்லை


“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்குத்தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு குயவர், ஜென் குருவிடம் சொன்னார். “பலியா?” என்று குரு வியப்புடன் கேட்டார். “ஆமாம் சாமி. தெய்வத்துக்குத் திருவிழா நாளன்றுப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும்.” என்றார் குயவர். இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவரின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை, துண்டு துண்டாகச் சிதறியது.

குயவர் கோபத்துடன் துறவியைப் பார்த்தார். துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய பானைச் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவரிடம் நீட்டினார்.

“என்ன இது?” என்றார் குயவர் கோபமாக. “உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு. “என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்துவிட்டு அது எனக்கு பிடிக்கும் என்று என்னிடமே நீட்டுகிறீர்கள். கேலியா? கிண்டலா? உங்களுக்கு பித்தா?” என்று ஆத்திரப்பட்டார் குயவர்.

“அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா. உண்மையான அன்புடன் தான் செய்தேன்” என்று குரு சிறிதும் பதட்டப்படாமல் சொன்னார். “நான் செய்த அந்தப் பானையில் என் உழைப்பு முழுவதும் அடங்கியிருக்கிறதே! அதை உடைக்க நான் எப்படிச் சம்மதிப்பேன்? இது எனக்குப் பிடிக்கும் என்று யார் உமக்குச் சொன்னது?” என்றார் குயவர்.

“நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று உனக்கு யார் சொன்னது? இதை இறைவன் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய்? எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள்? எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப்படுவதை விரும்புவான்?” என்று குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவர் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.