2015-11-03 15:59:00

சிலுவை மரணம் மூலம் மரணத்திலிருந்து விடுதலைப் பெற்றுள்ளோம்


நவ.03,2015. கடந்த ஓராண்டு கால அளவில், திருஅவையில் உயிர் துறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கும் இவ்வேளையில், நாமும் திருஅவையில் நமக்குத் தரப்பட்டுள்ள பணியை புதுப்பிக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த 12 மாதங்களில் உயிர்துறந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்களின் ஆன்ம சாந்திக்காக, இச்செவ்வாய் காலை தூய பேதுரு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி நமக்கு வழிகாட்டிய இயேசுவைப்போல், நாமும் நம் மந்தைக்காக உயிரைக் கையளிக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்றுரைத்தார்.

பிறருக்காக உயிரை வழங்குவது என்பது, இவ்வுலகின் கண்களுக்கு இழப்பாகத் தெரிந்தாலும், இழப்பவரே தன்னை கண்டுகொள்வார், மேலும், அன்பிருக்கும் இடத்தில் இழப்பது குறித்த அச்சமில்லை எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பழைய ஏற்பாட்டில் எவ்வாறு, பாம்பால் தீண்டப்பட்டவர்கள், மோசே உயர்த்திய கோலின் மேலுள்ள பாம்பைப் பார்த்து, சாவிலிருந்து தப்பித்தார்களோ, அதுபோல் சிலுவையில் இடம்பெற்ற மரணம் மூலம், நாம் மரணத்திலிருந்து விடுதலைப் பெற்றுள்ளோம் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் வெற்றி என்பது எளிமையானது, ஏனெனில், அவரின் வெற்றி நம்மீது கொண்ட அன்பால் பெறப்பட்டது என எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.