2015-11-03 14:53:00

கடுகு சிறுத்தாலும் - கண்ணாடி சொல்லித்தரும் மூன்று பாடங்கள்


கண்ணாடியின் முன் நிற்கும்போது, நம் முகத்தில் படிந்துள்ள அழுக்கோ, கறையோ கண்ணாடியில் தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல் நம் உறவினரிடமும், நண்பர்களிடமும் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ, அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக்கூடாது. துரும்பை, தூண் ஆக்கவோ, கடுகை, மலையாக்கவோ கூடாது. கண்ணாடி சொல்லித்தரும் முதல் பாடம் இது!

கண்ணாடிக்கு முன்னால் நாம் நிற்கும்போது மட்டுமே, நம் குறையை, கண்ணாடி காட்டுகிறது. நாம் அங்கிருந்து அகன்றுவிட்டால், கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல், மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது, கண்ணாடி சொல்லித்தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல், நன்றி கூறவேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது, கண்ணாடி கற்றுத்தரும் மூன்றாவது பாடம்!

இனி, கண்ணாடி முன்னால் நின்று, நம் முகத்தை அழகுபடுத்த முயலும்போதெல்லாம் இந்த மூன்று பாடங்கள், நம் அகத்தை அழகுபடுத்தட்டும்...

(ஆஸ்திரேலியாவிலிருந்து, வத்திக்கான் வானொலி நேயர், நிர்மலா ஃபிரடெரிக் அவர்கள் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இவை...)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.