2015-10-30 14:52:00

மரியாதையே தொடர்புகளை வளர்க்கும் வழி - வசாயி பேராயர்


அக்.30,2015. அடுத்தவருக்கு உரிய மரியாதையை வழங்குவது ஒன்றே, ஆசிய நாடுகளில் தொடர்புகளை வளர்க்கும் வழி என்று, இந்தியாவின் வசாயி உயர் மறைமாவட்டத்தின் பேராயர், பீலிக்ஸ் அந்தொனி மச்சாடோ அவர்கள் கூறினார்.

"கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு" என்ற கருத்தை மையப்படுத்தி, Nostra Aetate என்ற பெயருடன், இரண்டாம் வத்திக்கான் சங்கம் வெளியிட்ட ஏட்டின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, பேராயர் மச்சாடோ அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.  

மனிதர்கள் மீதும், மனித உயிர்களின் புனிதத்துவம் மீதும் நம்பிக்கையில்லாமல், இயேசுவின் நற்செய்தியை இவ்வுலகில் பறைசாற்ற முடியாது என்று, ஆசிய ஆயர்கள் பேரவையின், பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர், பேராயர் மச்சாடோ அவர்கள் கூறினார்.

1965ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி Nostra Aetate சங்க ஏடு வெளியிடப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 28, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய பொது மறைக்கல்வி உரையின்போது, பல்சமய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.