2015-10-30 14:55:00

திருத்தந்தை: மறைசாட்சிகள், வெறும் நினைவுச் சின்னங்கள் அல்ல


அக்.30,2015. இயேசுவின் உன்னத தியாகத்தின் அடையாளமான திருப்பலியை ஆற்றிய வேளையில், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் உயிர் துறந்தது, அவரது தியாக வாழ்வுக்கு ஒரு சிறந்த அடையாளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

எல் சால்வதோர் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு வருகை தந்துள்ள 500க்கும் அதிகமான பிரதிநிதிகளை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, சான் சால்வதோர் பேராயராக பணியாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், அருளாளராக உயர்த்தப்பட்டது குறித்து தன் மகிழ்வை வெளியிட்டார்.

மறைசாட்சிகளின்  இரத்தம், கிறிஸ்தவத்தின் விதை என்று தெர்த்துல்லியன் கூறியதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, மறைசாட்சிகள், நினைவுச் சின்னங்களாக விளங்குவதைக் காட்டிலும், நம் வாழ்வுக்கு வழிகாட்டிகளாக இருப்பதே பொருளுள்ளது என்று எடுத்துரைத்தார்.

அருளாளர் ரொமேரோவும், அவருக்கு உற்ற துணையாக இருந்த அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்களும் எல் சால்வதோர் நாட்டு மக்களை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பல இன்னல்களையும், சவால்களையும் சந்தித்துவரும் எல் சால்வதோர் மக்களுக்கு, நெருங்கிவரும் இரக்கத்தின் சிறப்பு ஜுபிலி ஆண்டு, அருள் வழங்கும் ஆண்டாக அமையவேண்டும் என்ற ஆவலை, திருத்தந்தை தன் உரையில் வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.