2015-10-30 15:07:00

அமைதியின்றி, யாருக்கும் நம்பிக்கை இல்லை - கர்தினால் பிலோனி


அக்.30,2015. அமைதியின்றி, யாருக்கும் நம்பிக்கை இல்லை என்று, திருப்பீட உயர் அதிகாரிகளில் ஒருவரான, கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் கூறினார்.

நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி அவர்கள், "ஈராக் திருஅவை: வரலாறு, முன்னேற்றம், திருப்பணி" என்ற தலைப்பில், எழுதியுள்ள நூலை இப்புதனன்று வெளியிட்டபோது இவ்வாறு கூறினார்.

2001ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு முடிய, ஈராக் மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில், திருப்பீடத்தின் தூதராகப் பணியாற்றிய கர்தினால் பிலோனி அவர்கள், கடந்த 1000 ஆண்டுகளாக அந்நாடுகளில் தழைத்துவந்த கிறிஸ்தவத்தைக் குறித்து தன் நூலில் எழுதியுள்ளார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

இந்நூலின் அரேபிய மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் அறிவித்துள்ளதாக Fides செய்தி மேலும் கூறியுள்ளது.

அண்மையில் வத்திக்கானில் நிறைவுற்ற உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கர்தினால்கள், ஆயர்கள் பலர் இந்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர். 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.