2015-10-28 15:38:00

மிலான் திருத்தூதுப் பயணம் 2016, மே 7


அக்.28,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு மே 7ம் தேதி, இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்டத்திற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று, மிலான் உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அவர்கள் அறிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்புரோசியானம் வழிபாட்டுமுறை திருஅவையுடன் கொண்டிருக்கும் பாசத்தின் ஓர் அடையாளமாகவும், லொம்பார்தியா மாநில மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்கு உதவுவதாகவும் இத்திருத்தூதுப் பயணம் அமையும் என்றும் கூறியுள்ளார், கர்தினால் ஸ்கோலா.

வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பிக்கும் இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, உண்மை மற்றும் பிறரன்பில், எல்லா வயதினருக்கும், எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கும், அனைத்துக் கலாச்சார மக்களுக்கும் திருஅவையின் அன்பை வெளிப்படுத்துவதாய் இருக்கும் என்றும், கர்தினால் ஸ்கோலா அவர்கள், மிலான் உயர்மறைமாவட்ட இணையதளத்தில் கூறியுள்ளார்.

திருஅவையில் சமூகத்தில் ஓரங்கட்டப்படவர்கள் மற்றும் ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதற்கேற்ப, மிலான் உயர்மறைமாவட்டம் செயல்பட்டு வருகிறது என்றும் அறிவித்தார் கர்தினால் ஸ்கோலா.

இத்தாலியின் இரண்டாவது பெரிய நகரமான மிலானில் அமைந்துள்ள உயர்மறைமாவட்டம், அம்புரோசியானம் வழிபாட்டுமுறையைப் பின்பற்றுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.