2015-10-28 15:13:00

புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் பல்சமயப் பிரதிநிதிகள்


அக்.28,2015. கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருஅவைக்குள்ள உறவு பற்றிய விதித்தொகுப்பான Nostra Aetate என்ற ஏடு வெளியிடப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தையின் இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர் திருப்பீட உயர் அதிகாரிகள்.

இந்த ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பல்சமயப் பிரதிநிதிகளுடன், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் பங்கேற்ற  பல்சமய உரையாடல் அவைத் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran, மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch ஆகிய இருவரும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தனர்.

உலகில் அநீதிகளையும் சமத்துவமின்மைகளையும் களைந்து, அமைதிக்காக உழைக்கவும், நம் பொதுவான இல்லத்தைப் பராமரிக்கவும் திருத்தந்தை தொடர்ந்து விடுத்துவரும் அழைப்புக்கும், ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்த கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், அமைதிக்காகச் செபிப்போம் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மேலும், இப்புதன் பொது மறைக்கல்வி நிகழ்வில் நன்றி தெரிவித்த கர்தினால் Kurt Koch அவர்கள், இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ள யூத சமூகப் பிரதிநிதிகளின் சார்பில் தான் பேசுவதாகத் தெரிவித்தார்.

மீட்பு வரலாற்றில் யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் ஒன்றிப்பின் ஒளியில், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கம்,  கிறிஸ்தவ விசுவாசத்தின் யூத மூலங்களை வலியுறுத்துகிறது, இன்னும், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும், இடையே நிலவும் பொதுவான மாபெரும் ஆன்மீக மரபையும் ஏற்கிறது என்று கூறினார், கர்தினால் Koch.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.