2015-10-28 15:04:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாடு அழைப்பு


அக்.28,2015. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும்  செபிப்போம் என்று, இப்புதன் பொது மறைக்கல்வி உரையில் பங்குபெற்ற ஆயிரக்கணக்கான பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்விரு நாடுகளிலும் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் எண்ணற்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளதையும் இப்புதன் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்னர் குறிப்பிட்ட திருத்தந்தை, தெளிவான செயல்கள் வழியாக, இம்மக்களுக்கு நம் ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டுவோம் என்றும் கூறினார்.

மேலும், கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பாகிஸ்தான் திருப்பீடத் தூதர் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் இச்செவ்வாயன்று தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் தனது செபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலையில் இச்செவ்வாய் பிற்பகல் 2.20 மணிக்கு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள பதாக்ஷன் மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டது. இச்சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் பாதிப்பு உண்டாகியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.