2015-10-28 15:21:00

கத்தோலிக்க கல்வி பேராயத்தில் புதிய அமைப்பு


அக்.28,2015. உலகின் கத்தோலிக்க கல்வியில் அறிவியல் மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, திருப்பீடத்தின் கத்தோலிக்க கல்வி பேராயத்தில் ஒரு புதிய அமைப்பை இப்புதனன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Gravissimum educationis என்ற கிறிஸ்தவக் கல்வி குறித்த அறிக்கை அறிவிக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டை முன்னிட்டு இப்புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்துள்ளார் திருத்தந்தை.

1965ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தால் Gravissimum educationis என்ற கிறிஸ்தவக் கல்வி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதை மகிழ்வோடு நினைவுகூரும் இவ்வேளையில், இப்புதிய அமைப்பை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கல்விக்கு மனிதருடைய வாழ்வில் இருக்கும் மாபெரும் முக்கியத்துவத்தையும், இன்றைய சமூக முன்னேற்றத்தில் பெருகிக் கொண்டே வரும் அதன் செல்வாக்கையும் திருஅவை அறிந்துள்ளது, நிறைவாழ்வின் இறைத்திட்டத்தை எல்லா மக்களுக்கும் அறிவிக்கவும், அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் ஒன்று சேர்க்கவும், தன்னை நிறுவிய கடவுளிடமிருந்து திருஅவை கட்டளை பெற்றுள்ளது என்பதும் திருத்தந்தையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்துவின் படைகள் Legionaries of Christ துறவு சபை தொடங்கப்பட்டதன் 75ம் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு, பரிபூரண பலன் சலுகையை, அப்போஸ்தலிக்க பாவமன்னிப்பு சலுகை நிறுவனத்தின் வழியாக இப்புதனன்று வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் படைகள் சபை மற்றும் Regnum Christi என்ற அனைத்துலக கத்தோலிக்க இயக்கம் நிறுவப்பட்டதன் 75ம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2016ம் ஆண்டு இயேசுவின் திரு இதய விழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.