2015-10-22 16:37:00

திருத்தந்தை:கிறிஸ்துவின் முகத்தை ஏழைகளில் பார்க்கிறோம்


அக்.22,2015. “நமக்காக ஏழையான கிறிஸ்துவின் முகத்தை ஏழைகளில் நாம் பார்க்கிறோம்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இவ்வியாழனன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பீடத்திற்கும், ஜாம்பியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, வருகிற நவம்பரில், ஜாம்பியா செல்வார் பேராயர் Paul Richard Gallagher.   ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவில் வருகிற நவம்பர் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Gallagher அவர்கள், இந்த ஐம்பதாம் ஆண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் என்று, ஜாம்பியா மற்றும் மலாவி நாடுகளுக்கான திருப்பீடத் தூதர் பேராயர் ஜூலியோ முராட் அவர்கள் அறிவித்தார். இச்சுற்றுப்பயணத்தில், ஜாம்பிய அரசுத்தலைவர் Edgar Lungu அவர்களையும், மரியாதை நிமித்தம் சந்திப்பார் பேராயர் Gallagher. 1964ம் ஆண்டில் ஜாம்பியா சுதந்திரம் அடைந்தவுடன், 1965ம் ஆண்டில் ஜாம்பியாவுடன் தூதரக உறவுகளை உருவாக்கியது திருப்பீடம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.