2015-10-14 16:48:00

இளையோர் திருமண வாழ்வில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும்


அக்.14,2015. 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இப்புதன் காலை 8வது பொது அமர்வில் 13 சிறிய குழுக்களின் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. இம்மான்றத்தின் விவாதத் தொகுப்பின் 2வது பகுதியாகிய, குடும்ப அழைப்பை ஆய்ந்தறிதல் என்ற தலைப்பில் இக்குழுக்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டன. இம்மான்றம் முழுவதன் மையமாக, குடும்பத்தின் நற்செய்தி என்பது உள்ளது என்று இக்குழு அறிக்கைகள் கூறின.

இளையோர் திருமண வாழ்வில் ஈடுபடுவது ஊக்குவிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம், ஆயர்கள் மாமன்றத்திற்கும், இரக்கத்தின் ஜூபிலி ஆண்டுக்கும் இடையே உள்ள தொடர்பு, தம்பதியர் சேர்ந்து வாழ்வதில் காணப்படும் அழகு, ஞாயிறு திருப்பலிகளில் குடும்பங்கள் கலந்துகொள்வதன் முக்கியத்துவம், குடும்பங்களில் பெண்களின் உரிமைகள் மீறப்படுவது, கத்தோலிக்கப் பள்ளிகளின் முக்கியத்துவம், தற்போதைய மனிதர் விவிலியத்தில் வேரூன்ற வேண்டியதன் முக்கியத்துவம் போன்ற கருத்துக்கள் இவ்வறிக்கைகளில் இடம்பெற்றிருந்தன.  

மேலும், இந்த மாமன்றம் குறித்து இப்புதனன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் கூட்டத்தில், Westminster கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைத் தலைவர் பொகோட்டா கர்தினால் Rúben Salazar Gómez, ஆப்ரிக்காவின் புர்க்கினோ ஃபாசோ நாட்டின் Ouagadougou பேராயர் கர்தினால் Philippe Ouédraogo ஆகியோர் இம்மான்றம் குறித்துப் பகிர்ந்து கொள்வார்கள் என்று அறிமுகம் செய்து வைத்தார் அருள்பணி லொம்பார்தி. மேலும் இக்காலை பொது அமர்வில், இம்மான்றத்தின் விவாதத் தொகுப்பின் 3வது பகுதி பற்றி 15 தந்தையர் கருத்துக்களைத் தெரிவித்தனர் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.