2015-10-13 15:57:00

திருத்தந்தை :தோழமையுணர்வில்லாத நம் விசுவாசம் செத்ததே


அக்.13,2015. “தோழமையுணர்வில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்வோம். தோழமையுணர்வில்லாத நம் விசுவாசம் செத்ததே” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ஜென்டினாவில் நான்காவது மறைபோதக மாநாட்டில் கலந்துகொண்ட ஏறக்குறைய 2,200 பிரதிநிதிகளுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வைத் தொடர்ந்து அறிவிக்குமாறும், திருஅவையைக் கட்டியெழுப்புமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆர்ஜென்டினாவின் சந்தியாகோ தெல் எஸ்தேரோ நகரில், “மறைப்பணி, வாழ்வின் ஒரு சிறப்பியல்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற இம்மாநாட்டின் பிரதிநிதிகளுக்குத் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, மறைப்பணியாளர்கள் தங்கள் வாழ்வில் இயேசுவை முதன் முதலில் சந்தித்ததை ஒருபோதும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்வில் கேட்காத அல்லது பார்க்காத ஒன்றை பிறருக்குத் தெரிவிக்க இயலாது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, ஒருவர் ஒருவருக்காகச் செபித்து ஆதரவாக இருக்குமாறும், இயேசுவைப் போன்று வாழுமாறும் கேட்டுக்கொண்டார்.     

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.