2015-10-13 16:07:00

தத்து கொடுக்கும் மையங்கள் தீர்மானத்திற்கு ஆயர்கள் வரவேற்பு


அக்.13,2015. கொல்கத்தா அன்னை தெரேசா பிறரன்பு சபையினர் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு வைத்திருக்கும் மையங்களை மூடுவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை இந்திய ஆயர் பேரவை வரவேற்றுள்ளது.

இந்தியாவில் அன்னை தெரேசா பிறரன்பு சபையினர் நடத்தும் பல தத்து கொடுக்கும்  மையங்களில் 18, அரசின் அங்கீகாரம் பெற்றவை. இம்மையங்கள் குறித்துப் பேசியுள்ள அச்சபையின் தலைமைச் சகோதரி பிரேமா அவர்கள், தங்களின் சபை தற்போது இந்தியாவில் இத்தகைய மையங்களை நடத்த விரும்பவில்லை என்று அறிவித்துள்ளார்.

குழந்தைகளை தத்து கொடுப்பது குறித்த இந்திய அரசின் புதிய விதிமுறைகள், பாரம்பரியக் குடும்பங்கள் இல்லாதவையும் குழந்தைகளை தத்து எடுக்க வழி அமைக்கின்றது என்று அருள்சகோதரி பிரேமா அவர்கள் கூறியுள்ளார்.

திருமணமாகாத ஒரு பெண், எந்தக் குழந்தையையும் தத்து எடுக்கலாம், ஆனால் திருமணமாகாத ஓர் ஆண், பெண் குழந்தையை தத்து எடுக்க முடியாது என்று இந்திய அரசின் விதிமுறை கூறுகிறது. இவ்விதிமுறை ஒரே பாலினத் தம்பதியர் தத்து எடுப்பதற்கு அனுமதிப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய நான்காயிரம் குழந்தைகள் 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் தத்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அன்னை தெரேசா சபையினர் எத்தனை குழந்தைகளைக் கொடுத்துள்ளனர் என்பது அறிவிக்கப்படவில்லை.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.