2015-10-10 15:29:00

பொதுக் காலம் 28ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பொதுக் காலம் 28ம் ஞாயிறு - வாசகங்கள்

 

I              சாலமோனின் ஞானம் 7: 7-11 

II            எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4: 12-13

மாற்கு நற்செய்தி 10: 17-30

 

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் நான் பார்த்து வருத்தமும், எரிச்சலும் அடைந்த ஒரு விளம்பரம், இப்போது, மீண்டும் என் நினைவுக்கு வருகிறது. அவ்விளம்பரத்தின் தலைப்பு இவ்விதம் அமைந்திருந்தது: "என் நாடு இவ்வுலகிற்கு தந்தது, பூஜ்யம்" (My country’s contribution to the world: 0) அன்று, இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றிருந்த ஒரு நடிகர், இந்த வார்த்தைகளைச் சொல்வதாக, அந்த விளம்பரம் அமைந்திருந்தது. (BPL - 'Believe in the Best' campaign in 1996)

இந்த வார்த்தைகளை வாசித்ததும், மனதில் தோன்றும் கருத்து என்ன? எனது நாடு, அதாவது, இந்தியா, இவ்வுலகிற்கு எதுவும் தரவில்லை என்பதுதானே! அதுதான் எனக்குள் எரிச்சலை உண்டாக்கியது. ஆனால், ‘பூஜ்யம்’ என்பதை ஒரு கணிதக் குறியீடாக எண்ணிப் பார்க்கும்போது, அந்தக் குறியீடு இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, பெருமையாக உள்ளது.

தொடர்ந்து, அந்த விளம்பரத்தில், இந்தப் பெருமை நிலைநாட்டப்பட்டது. இந்தியர்கள் (குறிப்பாக, ஆரியபட்டா) கண்டுபிடித்த 'பூஜ்யம்' இல்லாமல், இன்று அறிவியல் வளர்ந்திருக்காது என்ற கருத்துக்கள் கூறப்பட்டிருந்தன. பூஜ்யம் இல்லாத உரோமானிய எண்கள் எவ்வளவு குழப்பத்தை உருவாக்கின என்பதை வரலாறு அறியும். தன்னிலேயே மதிப்பு ஏதுமில்லாத பூஜ்யம் என்ற அந்தக் குறியீட்டை இணைத்தபின், கணிதமும், அறிவியலும் எவ்வளவு தூரம் வளர்ந்த்து என்பதையும் இவ்வுலகம் அறியும். பூஜ்யம் அல்லது, ‘சைஃபர்’ தனியாக இருக்கும்போது இல்லாத மதிப்பு, இன்னொரு எண்ணோடு ஒட்டிக்கொண்டதும் வந்துவிடுகிறது. பூஜ்யத்தைப் பற்றி ஏன் இந்த திடீர் ஆராய்ச்சி என்று கேட்கத் தோன்றுகிறதா? சொல்கிறேன்.

ஒரு செல்வந்தர், உலகத்திலேயே அதிக அளவு செலவு செய்து ஒரு வீடு கட்டியுள்ளார். வீட்டின் மதிப்பு என்ன? 6,596 கோடி ரூபாய். 6,596 கோடிக்கு எத்தனை பூஜ்யங்கள்? இங்குதான் ஆரம்பித்தது என் பூஜ்ய ஆராய்ச்சி.

உலக சந்தையில் ஏறத்தாழ 1 பில்லியன் (1,000,000,000) டாலர் மதிப்புள்ள இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் 6 பேர் – செல்வந்தர், அவரது அம்மா, மனைவி, அவர்களது மூன்று பிள்ளைகள்... இந்த ஆறு பெருக்கு உதவி செய்ய 600 வேலைக்காரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். தங்கிவிட்டுப் போகட்டுமே, நமக்கென்ன? பொறாமையில் நான் புழுங்குவதாக, புலம்புவதாக நினைக்க வேண்டாம். செல்வத்தைப்பற்றி, செல்வந்தர்களைப் பற்றி, இயேசு, இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளது, இப்படிப்பட்ட சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தது.

ஏராளமாய் செல்வம் சேர்த்து வைத்திருந்த ஒருவர், நிலைவாழ்வு பெற என்ன வழி என்று தேடும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தேடல், அவரை, இயேசுவிடம் கொண்டு வருகிறது. இயேசு அவரிடம் கட்டளைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறார். அவரோ அதற்கும் மேல் என்ன செய்வது என்று கேட்கும் போது, இயேசு: "நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்கிறார். அவர் சற்றும் எதிபாராத சவாலை இயேசு அவர்முன் வைத்தார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். அவர் தேடிவந்த நிலைவாழ்வை விட, அவருடைய சொத்துகள் அவரை அதிகமாய் பற்றியிருந்ததால், அவரால் இயேசுவின் சவாலான அழைப்பை ஏற்க முடியவில்லை. போகும்போது, அவர், இயேசுவை, திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போயிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். எந்த நிமிடமும், இயேசு மற்றுமோர் எளிதான வழியைச் சொல்லமாட்டாரா என்ற ஏக்கத்தில் அவர் அப்படி பார்த்தபடியே சென்றிருப்பார். இயேசுவும் அவரைக் கனிவோடு பார்த்தபடியே நின்றிருப்பார். இத்தனை செல்வங்கள் இருந்தும், அவர் கடவுள் மட்டில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு, கட்டளைகளை எல்லாம் இளவயது முதல் கடைபிடித்திருக்கிறாரே என்று, இயேசுவுக்கு அவர் மேல் மதிப்பு இருந்திருக்கும்... ஆனாலும், என்ன செய்வது? அவரால் அடுத்த நிலைக்கு உயர முடியவில்லையே என்று இயேசுவுக்கு அவர் மேல் பரிதாபம் ஏற்பட்டிருக்கும். அந்த பரிதாப உணர்வில் இயேசுவிடமிருந்து வெளி வந்தன, ஆழமான வார்த்தைகள்: “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.”

இயேசுவின் இந்தக் கூற்று சீடர்களைத் திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியதாக நற்செய்தி சொல்கிறது. அதிர்ச்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். திகைப்பு, வியப்பு, அதிர்ச்சி... இருக்காதா பின்னே? செல்வந்தர் விண்ணரசில் கட்டாயம் நுழைவார்கள்; அங்கு அவர்களுக்கு ஏற்கனவே உயர்ந்த இடங்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், விண்ணக வாசலில், அவர்கள் வரிசையில் நிற்கக்கூட தேவையில்லை என இஸ்ராயேல் மக்கள் நம்பிவந்தபோது, "மன்னிக்கவும். அவர்களுக்கு விண்ணரசில் இடம் இல்லை. அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு முயன்றால், ஒருவேளை நிறைவாழ்வுக்கு செல்லமுடியும்" என்ற அதிர்ச்சியானத் தகவலை இயேசு சொல்கிறார். செல்வத்தைப்பற்றி, செல்வந்தரைப்பற்றி, சீடர்களுடைய எண்ணங்களைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, அவர்களைச் சிந்திக்கவைத்தார் இயேசு. இன்று நமக்கும் செல்வம், செல்வந்தர் இவற்றைப்பற்றி சிந்திக்க ஒரு அழைப்பு விடுக்கிறார், இந்த நற்செய்தி வழியே.

செல்வம் சேர்ப்பது, செல்வங்களால் சிறைப்படுவது, செல்வத்தைப் பகிர்வது என்று மூன்று கோணங்களில் செல்வத்தைப்பற்றி சிந்திக்கலாம்.

செல்வம் சேர்ப்பது - ஒருவர் தன் சொந்த முயற்சியாலோ, அல்லது பரம்பரையாய் வந்த வசதியாலோ செல்வந்தர் ஆகிறார். “ஆகட்டுமே, அதனால் நமக்கென்ன” என்று அவ்வளவு எளிதாக, மேலோட்டமாக பேச வேண்டாம். அந்தச் செல்வம், நேர்மையான வழிகளில் வந்த செல்வம் என்றால், அவர்கள் தலைமுறை, தலைமுறையாய் வாழ்ந்து அனுபவிக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

ஆனால், சேர்க்கப்பட்ட செல்வம், நேர்மையற்ற குறுக்கு வழிகளில் வந்திருந்தால், கேள்விகள் எழும், சாபங்கள் வெடிக்கும். அதுவும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி, அவர்கள் வாழ்வை சீரழித்து சேர்க்கப்பட்ட செல்வம் என்றால், கோபம் சாபம் இவை எழுவதில் நியாயம் உள்ளது. பல ஏழைகளுடைய வயிறு பற்றி எரியும்போது, அந்த நெருப்பில் குளிர்காயும் செல்வந்தர்களைப் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.

நீரோ மன்னன் பிடில் வாசிக்கும் திறமை பெற்றவனாம். அழகான இசை படைப்புகள் அவன் இசைக் கருவியிலிருந்து வெளி வருமாம். அவனுக்கு திறமை இருந்தது. இசையை உருவாக்கினான். இதில் என்ன தவறு என்ற கேள்வி எழும். ஆனால், அவன் அந்த இசையை உருவாக்க, ‘mood’ தேடினானாம். அந்த ‘music mood’ உருவாக்க, அவன், உரோமை நகரைத் தீயிட்டு கொளுத்தினான் என்பார்கள். கொழுந்துவிட்டு எரியும் நகரமும் அங்கு எழும் மக்களின் துயரக் கதறல்களும் அவனது இசைப் படைப்பைத் தூண்டியதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பின்னணியைக் கேட்டபின், மன்னன் நீரோவுக்கு திறமை இருந்தது, இசைத்தான் என்று சொல்லி மழுப்பமுடியுமா? இதே கேள்வியை செல்வந்தரைப் பற்றி பேசும் போதும் எழுப்ப வேண்டும். திறமை இருந்தது; செல்வம் சேர்த்துக் கொண்டனர் என்று மேலோட்டமாகப் பேசமுடியாது. பின்னணிகள் அலசப்பட வேண்டும்.

செல்வங்களால் சிறைப்படுவது இரண்டாவது கருத்து. உலகிலேயே அதிக விலையுயர்ந்த வீட்டைப்பற்றி முதலில் பேசினோம். செல்வங்களில் சிறைப்படுவதற்கு இது ஓர் உதாரணம். இந்த வீடு வேறு எந்த முதல்தர நாட்டிலும் கட்டப்படவில்லை. வறுமைப்பிடியில் சிக்கித்திணறும் இந்தியாவில், மும்பையில், கட்டப்பட்டுள்ளது. 6,596 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, எல்லா வசதிகளும் கொண்டது. இதை வேறுவிதமாக சொல்லவேண்டுமானால், அந்த வீட்டில் வாழ்பவர்கள், எக்காரணம் கொண்டும் வெளியே வர, தேவையே இல்லை. எல்லாம் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும். இப்படி வாழ்வதும், ஒரு சிறைதானே. இப்படி கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு சூட்டப்பட்டுள்ள பேர் என்ன தெரியுமா? அன்டில்லா. ‘அன்டில்லா’ என்பது, புராணங்களில் வரும் ஒரு கனவுத் தீவு. தீவு, சிறை... எல்லாமே நம்மைத் தனிமைப் படுத்தும். இந்த மாளிகையும் அப்படித்தான்.

இச்சிறையிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? செல்வத்தைப் பகிர்வது ஒன்றே, இச்சிறையிலிருந்து நம்மை விடுவிக்கும். அதுவும் இயேசு இன்றைய நற்செய்தியில் குறிப்பிட்டுச் சொன்னது போல், ஏழைகளிடம் பகிர்வது. பகிர்வைப்பற்றி பல முறை பேசியிருக்கிறோம், கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். தோர்டன் வில்டேர் (Thorton Wilder)  என்ற நாடக ஆசிரியர் பணத்தைப் பற்றி கூறியுள்ள ஒரு கருத்து, பயனுள்ளதாக இருக்கும்: "பணம் உரத்தைப் போன்றது. குமித்து வைத்தால், நாற்றம் எடுக்கும். பயன் அளிக்காது. நிலமெங்கும் தூவப்படும்போதுதான் பயனளிக்கும்."

உலகின் மிகப்பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெற்றவர்கள்: பில் கேட்ஸ், வாரன் பஃபெட் (Bill Gates, Warren Buffet). இவர்களது வாழ்க்கையைக் கொஞ்சம் திருப்பி பார்த்தால், செல்வத்தைப் பகிர்வது பற்றிய பாடங்களைப் பயிலலாம்.

பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 2008ம் ஆண்டு வரை 28 பில்லியன் டாலர்களைச் சமூகச் சேவையில் செலவழித்திருக்கிறார்கள். பில் கேட்ஸ் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து விலகும்போது, தன் சொத்துக்கள் முழுவதையும் (58 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ளது.) சமூகச் சேவைக்கென எழுதிவைக்கப் போவதாகவும், தன் பிள்ளைகளுக்கு அந்த சொத்து சென்று சேராது எனவும் கூறியதாக செய்திகள் வெளியாயின. வாரன் பஃபெட் அவர்கள், 2006ம் ஆண்டு, உலக வரலாற்றில் அதுவரை எந்தத் தனி மனிதனும் செய்யாத ஒன்றைச் செய்தார். தன் சொத்திலிருந்து, 37 பில்லியன் டாலர்களை, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குக் கொடுத்தார்.

கேட்ஸ் தம்பதியரையோ, வாரன் பஃபெட் அவர்களையோ புனிதராக்கும் முயற்சி அல்ல இது. ஆனால் உலகின் முதன்மையான செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை பகிர்ந்துகொண்டது, அதுவும் ஏழைகளோடு பகிர்ந்துகொண்டது, நம்பிக்கை தரும் செய்திதானே!

பூஜ்யத்தில் ஆரம்பித்தோம், மீண்டும் பூஜ்யத்திற்கு வருவோம். 28 பில்லியன் டாலர்கள், 58 பில்லியன் டாலர்கள்,  37 பில்லியன் டாலர்கள், இவற்றிற்கெல்லாம் எத்தனை பூஜ்யங்கள்? சரியாகத் தெரியவில்லை. தெரியவும் தேவையில்லை. ஆனால், இந்தப் பூஜ்யங்களுக்குச் சிறப்பான மதிப்பு உண்டு. எத்தனையோ பூஜ்யங்கள் கொண்ட அவர்களது செல்வங்களை ஏழைகளோடு பகிர்ந்ததால், அந்த பூஜ்யங்கள் கூடுதல் மதிப்பு பெற்றுவிட்டன.

ஒன்றன்பின் ஒன்றாக மாலைபோல் நீண்டு செல்லும் பூஜ்யங்களை தங்கள் செல்வம் என்று சேர்த்து அழகு பார்ப்பதைவிட, அந்த பூஜ்யங்களைப் பகிர்ந்தளித்தால், அவை உயர்ந்த மதிப்பு பெறும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் இவ்விதம் கூறியுள்ளார்: “நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.