2015-10-07 16:16:00

2016ல் திருத்தந்தையின் மெக்சிகோ நாட்டு திருத்தூதுப் பயணம்


அக்.07,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்குத் தேவையான பயணத் திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன என்றும், அவர், 2016ம் ஆண்டில் இப்பயணத்தை மேற்கொள்வார் என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், இயேசு சபை அருள் பணியாளர் ­ஃபெதெரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றம் குறித்து அருள்பணி லொம்பார்தி அவர்கள், செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த வேளையில், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தொடுத்த கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டிற்குச் செல்லும் ஆவலை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டிய அருள்பணி லொம்பார்தி அவர்கள்,  திருத்தந்தையின் மெக்சிகோ பயணம் குறித்த விவரங்கள், நவம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவித்தார்.

அண்மையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபா நாட்டிலிருந்து, அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்க்டன் செல்லும் விமானப் பயணத்திலும் மெக்சிகோ நாட்டிற்குச் செல்வது குறித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.