2015-10-06 16:25:00

திருஅவைத் தலைவர்கள் இறைவாக்கினர் பணியை ஆற்ற அழைப்பு


அக்.06,2015. இக்காலத் திருஅவைத் தலைவர்கள், துன்பம் மற்றும் தன்னையே வெறுமையாக்கும் இறைவாக்கினரின் பணியை ஆற்ற அழைக்கப்பட்டுள்ளனர் என்று கர்தினால் George Alencherry அவர்கள் மாமன்றத் தந்தையரிடம் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில், இச்செவ்வாய் காலை ஒன்பது மணிக்குத் தொடங்கிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் மூன்றாவது பொது அமர்வில் முதல் நிகழ்வாக இடம்பெற்ற காலை திருப்புகழ்மாலை செபத்தில் மறையுரையாற்றிய, சீரோ மலபார் வழிபாட்டுமுறை திருஅவைத் தலைவரும், Ernakulam-Angamaly உயர் பேராயருமான கர்தினால் George Alencherry அவர்கள் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

இறைவார்த்தையாலும், சொந்த வாழ்வின் சான்றாலும் மக்களுக்கு ஆதரவளித்த இறைவாக்கினர் எரேமியா போன்று பணியாற்ற திருஅவைத் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றுரைத்த கர்தினால் Alencherry அவர்கள், எரேமியா, இறைவாக்கினர் பணியை ஆற்றியதால் துன்புற்றார் என்றும் கூறினார்.

காயமடைந்த, புண்பட்ட மற்றும் அழுக்காய் இருக்கும் திருஅவையை நான் விரும்புகிறேன், ஏனெனில் அது தெருக்களில் இருக்கின்றது என்றும், தனது சொந்தப் பாதுகாப்புக்குள்ளே தன்னை முடக்கிக் கொண்டு இருப்பதைவிட தெருக்களில் அழுக்காய் இருக்கும் திருஅவையை விரும்புகிறேன் என்றும் கூறினார் கர்தினால் Alencherry.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.