2015-10-02 16:19:00

அரசியல் அமைப்பு மனசாட்சியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்


அக்.02,2015. நேபாளத்தின் புதிய அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மதமாற்றம் குறித்த பிரிவை அரசியல் அமைப்பிலிருந்து அகற்றி விடுமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் மக்கள் அவையைக் கேட்டுள்ளனர்.

நேபாளம் தனது வரலாற்றில் முதன்முறையாக சமய சார்பற்ற அரசியல் அமைப்பை அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சி தருகின்றது, ஆயினும், அரசியல் அமைப்பின் பிரிவு 26,  சமய சார்பற்ற தன்மையின் முக்கியத்துவத்திற்கு வரையறை விதிப்பதாக உள்ளது என்று நேபாள அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் Paul Simick அவர்கள் கூறினார்.

நேபாள புதிய அரசியல் அமைப்பு குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஆயர் Paul Simick அவர்கள், மதமாற்றச் சுதந்திரத்தில் கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது  என்று கூறினார்.

சுதந்திரமாக மதம் மாறுவதற்கு இருக்கும் உரிமை பாதுகாக்கப்படும் என்று நேபாளப் பொதுநிலைத் தலைவர்களும், அரசும் உறுதி அளித்திருந்தபோதிலும், நாட்டின் இந்துமதத் தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் செயல்படுவது அதிகரித்து வருகின்றது என்றும் கூறினார் ஆயர் Paul Simick.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.