2015-09-29 15:50:00

வத்திக்கான் வானொலியின் நிகழ்ச்சிகள் புதிய இயக்குனர்


செப்.29,2015. வத்திக்கான் வானொலியின் நிகழ்ச்சிகள் இயக்குனராக, இயேசு அருள்பணி Andrzej Majewski அவர்களை இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர் திருவிழாவான இச்செவ்வாயன்று, வத்திக்கான் வானொலியின் தலைமையகச் சிற்றாலயத்தில் வானொலி பணியாளர்க்கு விழா திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள் தலைமையில் புதிய இயக்குனருக்கு வரவேற்பும் வழங்கப்பட்டது. இதுவரை நிகழ்ச்சிகள் இயக்குனராக, பணியாற்றிய இயேசு அருள்பணி அந்திரேயா கோப்ரோவெஸ்கி அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விழா திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள்,  வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள், நற்செய்தியை சப்தமாகவும் தெளிவாகவும் அறிவிக்குமாறும், நல்ல தகவல்கள் வழங்குவதில் எடுத்துக்காட்டாய்த் திகழுமாறும் கேட்டுக்கொண்டார்.

உலகுக்கு அதிகம் தேவைப்படும் அமைதி, வாழ்வை ஆதரித்தல், தோழமையுணர்வு, மன்னிப்பு ஆகிய செய்திகளை கடந்த 84 ஆண்டுகளாக வத்திக்கான் வானொலி பரப்பி வருகின்றது என்றும் உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இவ்வானொலி தினமும் 40 மொழிகளில் 79 நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது என்றும் பாராட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.