2015-09-26 14:28:00

கடுகு சிறுத்தாலும் - வெட்டி விடுங்கள், விஷம் விலகும்


ஆஸ்திரேலியாவில் நடந்ததாய் சொல்லப்படும் ஒரு சம்பவம் இது. இரயில்வேத் துறையில் பணிபுரிந்த ஒருவர், தனியே ஏதோ ஓரிடத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, ஒரு பாம்பு அவரது கையைக் கடித்துவிடுகிறது. மிகவும் விஷமுள்ள பாம்பு. மருத்துவமனை செல்வதற்கு வசதிகள் குறைவு. அதுவரை காத்திருந்தால், அவரது உயிர் போய்விடும் ஆபத்து. அவர் செய்தது என்ன? அருகிலிருந்த ஒரு கோடாலியை எடுத்தார். தன் கையை வெட்டிக்கொண்டார். இந்நாள் வரை அவர் உயிரோடு இருக்கிறார், வேலை செய்து வருகிறார், ஒரு கையோடு. அவரைப் பொருத்தவரை, கையை விட, உயிரைப் பெரிதாக மதித்ததால், அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.

விஷம் ஏறும் கரத்தை வேடிக்கைப் பார்ப்பது மதியீனம். ஆனால், நம் வாழ்வின் பல பகுதிகளில், பல வடிவங்களில் ஏறிவரும் விஷங்களை,  கண்டும் காணாமல் வாழ்வது சரியா? இந்த நிலைக்கு ஓர் எச்சரிக்கையாக இயேசுவின் வார்த்தைகள் விவிலியத்தில் இவ்வாறு ஒலிக்கின்றன: “உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.” - மாற்கு நற்செய்தி 9: 43

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.