2015-09-16 16:19:00

கடுகு சிறுத்தாலும்.... : அதிர்ஷ்டம் அந்த நாணயத்தில் இல்லை!


அவர் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தார். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைத்தால் அதிர்ஷ்டம் வரும் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தார். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டார். அன்று, அவருக்கு மற்ற நாள்களைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தார். அன்றிலிருந்து அவர் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வார். வெளியே எடுக்கமாட்டார். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவருக்கு அதிர்ச்சி! அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தார். அவன் மனைவி சொன்னார், “என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். அதில் நீங்கள் வைத்திருந்த துளையிட்ட காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறொரு காசைப் போட்டுவைத்தேன்” என்றார். “இது எப்போது நடந்தது?” என்று கணவர் கேட்டார். “அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றார் மனைவி. கணவர் அமைதியாக சிந்திக்கத் தொடங்கினார்.

உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது, அந்த நாணயம் அல்ல, தன்னுடைய நம்பிக்கைதான் என்பதை உணர்ந்தார். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.