2015-09-15 16:24:00

மனித மாண்பை மீட்டுக் கொடுப்பதில், அன்னை தெரேசாவின் பணி


செப்.15,2015. துன்புறுவோர் மற்றும் கைவிடப்பட்டோரின் மாண்பை மீட்டுக் கொடுப்பதில், அருளாளர் அன்னை தெரேசா சிறப்புப் பணியாற்றினார் என்று, இச்செவ்வாய் காலை, அன்னை தெரேசா கல்லறையில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார், நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி.

துயருறும் அன்னைமரியாவின் திருநாளான இச்செவ்வாயன்று, கொல்கத்தாவின் அன்னை தெரேசா பிறரன்பு சபை அருள் சகோதரிகள் தலைமை இல்லத்தில், அன்னை தெரேசாவின் கல்லறைக்கு முன் திருப்பலி நிறைவேற்றிய, கர்தினால் ஃபிலோனி அவர்கள், துன்பங்களையும், துயரங்களையும் கண்முன் கண்டபோது, அன்னை தெரேசா அவர்கள், அவற்றிற்கு தன்னால் இயன்ற தீர்வைத் தர முயன்றார் என்று எடுத்துரைத்தார்.

அநீதியால் துன்புற்ற மக்களுக்கு நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக செயல்பட்ட அன்னை தெரேசா அவர்கள், தன் எளிய அன்பை, செயல்களில் வெளிப்படுத்தினார் என்று, கர்தினால் ஃபிலோனி அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

அன்னை மரியாவின் வாழ்வில் நிகழ்ந்த பல துயர நிகழ்வுகள், நமக்குக் கற்றுத்தரும் நம்பிக்கை குறித்தும், தன் மறையுரையின் துவக்கத்தில் விரிவாக எடுத்துரைத்தார், கர்தினால் ஃபிலோனி.

இதற்கிடையே, இச்செவ்வாய் முதல், சனிக்கிழமை முடிய, கர்தினால் ஃபிலோனி அவர்கள், நேபாள நாட்டில் மேற்கொள்ளவிருந்த மேய்ப்புப்பணி பயணம், பாதுகாப்பு காரணங்களுக்காக, இடம்பெறாது என்று .அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.