2015-09-14 16:59:00

இவ்வுலகின் எண்ணப் போக்கையே தலைகீழாக மாற்றியமைத்தார் இயேசு


செப்.14,2015. சிலுவைச் சித்ரவதைகள் வழியாக இயேசு இவ்வுலகின் எண்ணப் போக்கையே தலைகீழாக மாற்றியமைத்தார் என்று, இந்தியாவின் கொல்கத்தாவில் மக்களுக்கு ஆற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி.

பங்களாதேஷ், நேபாளம், மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு வரும், நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பிலோனி அவர்கள், கொல்கத்தாவின் பாண்டெல் (Bandel) செபமாலைமாதா பசிலிக்காவில் இத்திங்கள் மாலை நிறைவேற்றியத் திருப்பலியில், திருச்சிலுவையின் மாட்சி குறித்து எடுத்துரைத்தார்.

அதிகாரத்தையும், வன்முறைகளையும் பயன்படுத்துவோரின் வழிமுறைகளைப் புரட்டிப்போடுவதாக, வல்லமையுள்ள இயேசுவின் பணிவு இருந்தது என்று கூறிய கர்தினால் பிலோனி அவர்கள், இதேயே திருத்தூதர் பவுலும் பின்பற்றினார், ஏனெனில், அவர் தன் சிறப்பு குறித்து எந்நாளும் பெருமை பாராட்டியதில்லை, மாறாக, அனைத்து மகிமையும் இறைவனுக்கே என்று வாழ்ந்தார், எனக் கூறினார்.

இன்றைய உலகில்,  சிலுவையின் பொருள் குறித்து, சிலுவை எனும் மறைபொருளின் முக்கியத்துவம் குறித்து ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார், கர்தினால் பிலொனி. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.